மதுரை, :ராமநாதபுரம் மாவட்டம் குளவிப்பட்டியில் 53 ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்ததற்கு இறப்புச் சான்று வழங்க மகன் தாக்கல் செய்த வழக்கில் கலெக்டர் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் சேதுராமலிங்கம் தாக்கல் செய்த மனு: பரமக்குடி அருகே குளவிப்பட்டியில் எனது தந்தை அழகர் உடல்நலம் பாதிப்பால் 1970 ஜன.,24 ல் இறந்தார். எனது தாயும் இறந்துவிட்டார். எனக்கு 4 சகோதரிகள். கவனக்குறைவால் தந்தையின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பூர்வீகச் சொத்திற்குரிய வருவாய்த்துறை ஆவணங்களை மாற்ற, வாரிசு சான்று பெற தந்தையின் இறப்புச் சான்று வழங்கக் கோரி பரமக்குடி ஆர்.டி.ஓ.,விடம் விண்ணப்பித்தேன்.
வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர் விசாரித்தனர். தந்தை 1970ல் இறந்ததற்கு வி.ஏ.ஓ., சான்றிதழை சமர்ப்பித்தேன். எனது மனுவை ஆர்.டி.ஓ.,நிராகரித்தார். அதை ரத்து செய்து சான்று வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சேதுராமலிங்கம் குறிப்பிட்டார்.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன்: மனுதாரர் ராமநாதபுரம் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும். 1970 ல் அதாவது 53 ஆண்டுகளுக்கு முன் தொலைதுார கிராமத்தில் மரணம் நிகழ்ந்தபோது வருவாய்த்துறை அல்லது பிற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இந்த உண்மைகளை கலெக்டர் மனதில் கொள்ள வேண்டும். மனுதாரர் மற்றும் அவரது சகோதரிகளிடம் கலெக்டர் விசாரிக்கலாம். பிறப்பு மற்றும் இறப்புச் சட்டம் 1970 ஏப்.,1 ல் அமலானது. மனுதாரரின் தந்தை 1970 ஜன.,24ல் இறந்துள்ளார். இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு 6 வாரங்களில் கலெக்டர் உத்தரவு பிறப்பிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement