வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் 5.3 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகளை விட்டு மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சாதித்தனர்.

பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானிகள் பச்சை வரி இறால் குஞ்சுகளை வளர்த்து மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடலில் விடுகின்றனர்.
அதன்படி நேற்று தலைமை விஞ்ஞானி தமிழ்மணி, விஞ்ஞானி ஜான்சன் ஆகியோர் மண்டபம் முனைக்காடு கடலில் மீனவர்கள் மூலம் படகில் சென்று 10.20 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகளை விட்டனர்.

இந்த இறால் குஞ்சுகள் 3 முதல் 4 மாதங்களில் 100 முதல் 150 கிராம் வரை வளர்ந்து மீனவர் வலையில் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய கடல் பகுதியில் மீன் உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் ராமேஸ்வரம் மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதை தடுக்கலாம்.
மேலும், இறால் மீன்பிடிப்பால் மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 2022 பிப்., முதல் தற்போது வரை 5.30 கோடி இறால் குஞ்சுகளை ராமேஸ்வரம், மண்டபம் கடலில் விட்டு உள்ளதாக, கூறினர்.