காட்பாடி : காட்பாடி அருகே, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் நாய் பலியானது.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே சோமநாதபுரத்தில், சாலையோர விவசாய நிலத்தில் கிடந்த பொட்டலத்தை நேற்று காலை, நாய் ஒன்று கடித்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் வெடித்தில், துாக்கி வீசப்பட்ட நாய், தலை சிதறி பலியானது.
பொன்னை போலீசார் விசாரணையில், அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் அழித்து அட்டகாசம் செய்து வருவதால், விவசாயிகள் சிலர், நிலத்தின் அருகில் நாட்டு வெடிகுண்டுகளை போட்டு வைத்ததும், அதை கடித்தால் வெடிக்கும் என்பதும் தெரியவந்தது.
நாட்டு வெடிகுண்டு போட்டு வைத்தவர்கள் குறித்து, பொன்னை போலீசார் விசாரித்து வருகின்றனர்.