சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டட கழிவுகள் கொட்டப்படுவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
ராம்சர் ஈர நிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 10 ஏக்கரில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு, 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது.
கட்டட கழிவுகள் கொட்டப்படும் நிலம், ஒரு காலத்தில் தரிசு நிலம் என்று குறிப்பிடப்பட்டு, ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும், அந்த நிலம் இப்போது ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கும், ராம்சர் ஒப்பந்தத்திற்கு எதிரானது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளக் கூடாது. சட்டவிரோதமாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என, 2008-ல், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை அளித்துள்ளது. அதற்கு எதிரான செயல்களை, அரசு அனுமதிக்கக் கூடாது.
'தரிசு நிலம்' என்று பட்டா பெறப்பட்டு, இதுவரை பயன்படுத்தப்படாத நிலங்களை, தமிழக அரசு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.