தாரமங்கலம்: தாரமங்கலம் நகர தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம், அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. நகர செயலர் குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அதில், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்பட, 1,100 பயணாளிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி பேசியதாவது:
தி.மு.க., அரசை நேரடியாக எதிர்க்க முடியாததால், கவர்னரை வைத்து மக்களுக்கு நல்ல பலன் தரும்
திட்டங்களை கொடுக்கும், 25 சட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுக்கப்படுகிறது. அதேபோல், 'நீட்' தேர்வை கொண்டு வந்து தமிழகத்தில் உள்ள, 3,000 மருத்துவ இடங்களுக்கு தமிழக மாணவர்கள், 10 சதவீதம் கூட சேர முடியாத நிலையை பா.ஜ., உருவாக்கியது. இதுபோன்ற திட்டங்களை எதிர்க்காமல், பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ளது அ.தி.மு.க., அந்த இரு கட்சிகளும் தமிழின துரோகிகள். ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக, பெண்களுக்கு விரைவில், 1,000 ரூபாய் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.