ஓசூர்: அஞ்செட்டி தாலுகா, உரிகம் அருகே கோவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாயக், 55; கொசு வலை வியாபாரம் செய்து வந்தார்; குடிப்பழக்கமுடைய இவர் கடந்த, 12ல் திடீரென உடல்நிலை பாதித்து இறந்தார். அப்பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சுவாமி கோவில் திருவிழா நடந்ததால், ரங்கநாயக் இறந்ததை போலீசாருக்கு தெரிவிக்காமல், அவரது உறவினர்கள் அடுத்த நாள் அதிகாலை சடலத்தை எரித்தனர். இது குறித்து, உரிகம் வி.ஏ.ஓ., கிரிஷ்குமார், 33, அஞ்செட்டி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதையடுத்து, ரங்கநாயக் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஜோதி லிங்கேஸ்வரர் கோவில் திருவிழாவில், ஒரு பிரிவினர் வைத்த பேனரில், தங்களுக்கு வேண்டியவரின் பெயரை அச்சடிக்காததால், திருவிழாவில் நடக்கும் நாடகத்திற்கு செல்லக்கூடாது என, உயிரிழந்த ரங்கநாயக் சமூகத்தை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதையும் மீறி கடந்த, 12ல் ரங்கநாயக் நாடக நிகழ்ச்சியை பார்க்க சென்றதாகவும், அவரை அவரது உறவினர்கள் இழுத்து வந்ததாகவும், அவர்களிடமிருந்து ரங்கநாயக் தப்பிச்சென்று, நாடகம் பார்க்க சென்றதாகவும், அதனால், அவரது உறவினர்கள் ரங்கநாயக்கை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரிலும், அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.