கரூர்: மாசி மாதம் துவங்கிய நிலையில், கல்லா மாங்காய் கரூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது. ஒரு கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் மாங்காய் சீசன், மார்ச் முதல், ஜூலை மாதம் வரை இருக்கும். முன்னதாக, தை மாதம் முதல், கிளி மூக்கு என அழைக்கப்படும், கல்லா மாங்காய் விற்பனைக்கு வர துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் மதுரை
மாவட்டங்களில் இருந்து, கல்லா மாங்காய் கரூர் உழவர் சந்தை, ஜவஹர் பஜார் சனிக்கிழமை சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு வர துவங்கியுள்ளது. முதல் தர மாங்காய் கிலோ, 60 ரூபாய் வரையிலும், இரண்டாம் தர மாங்காய், 40 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கல்லா மாங்காய் ஊறுகாய் மற்றும் ஏற்றுமதி தேவைக்காக அதிகம் விற்பனை செய்யப்படும். தற்போது, சீசன் துவங்கியுள்ளதால் கிலோ, 60 ரூபாய் வரை விற்கிறது. விரைவில், மற்ற மாங்காய் வகைகள் விற்பனைக்கு வரும். அப்போது, கல்லா மாங்காய் விலை குறையும். குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில், முதல் தர கல்லா மாங்காய் கிலோ, 20 ரூபாய் அளவுக்கு விலை குறைந்து விடும்.
இவ்வாறு கூறினர்.