ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் வனத்துறையினர் விட்ட, 335 ஆமை குஞ்சுகளில் சிலவற்றை செம்பருந்துகள் கவ்விச் சென்றன.
மன்னார் வளைகுடா கடலில் வாழும் அலுங்காமை, சித்தாமை, தோணி ஆமைகள் இனப்பெருக்கத்திற்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் முகுந்தராயர் சத்திரம் வரை முகாமிடும்.
இங்குள்ள கடற்கரையில் ஆமைகள் மணலில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். இவற்றை வனத்துறையினர் சேகரித்து, முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள பாதுகாப்பு வேலிக்குள், முட்டைகளை மணலில் புதைத்த பின், 50 -- 60 நாட்களுக்குள் குஞ்சுகள் குழிகளில் இருந்து வெளியேறும்.
அதன்படி, ஐந்து குழிகளில் இருந்த, 624 முட்டைகளில் நேற்று, 335 ஆமை குஞ்சுகள் பொரித்து வெளியே வந்தன. இவற்றை மண்டபம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வேட்டை தடுப்பு காவலர்கள், தனுஷ்கோடி கடலில் விட்டனர்.
அப்போது வானில் வட்டமடித்த செம்பருந்துகள், சில குஞ்சுகளை லாவகமாக கவ்விச் சென்றன. சுதாரித்த வனத்துறையினர், சத்தமிட்டு விரட்டினர்.
இதுவரை, 127 ஆமைகள் இட்டுச் சென்ற, 14 ஆயிரத்து, 20 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். இதில், 20 குழியில் பொரித்த, 2,143 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.