வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலையடிவாரத்தில் பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலை ஏறியதாக கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர். மாலை 4:30 மணிக்குமேல் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூஜாரிகள் பிரதோஷ வழிபாடு பூஜைகளை செய்தனர். திரளானோர் தரிசித்தனர்.
ஏற்பாடுகளை தக்கார் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் , கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.