உடுமலை:உடுமலையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 1800 பேர் நேற்று தேர்வு எழுதினர்.
ஊராட்சி, நகரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு, அவர்களின் இடத்துக்கு சென்று அடிப்படை கல்வியறிவு அளிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு எனப்படும் வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் நடக்கிறது.
ஒவ்வொரு பகுதியிலும், திட்டத்தை செயல்படுத்த பொதுவான கற்போர் மையம் துவக்கப்பட்டு, கல்வி கற்றுத்தர தன்னார்வலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தன்னார்வலர்கள் வாழ்வியல் திறன் சார்ந்த அடிப்படை கற்றலை கற்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நேற்று கற்போருக்கான தேர்வு பொதுத்தேர்வு பாணியில் நடந்தது. உடுமலையில், 110 மையங்களில் 1,800 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வில் வாசித்தல் 50 மதிப்பெண்ணுக்கும், எழுதுதல் 50, மற்றும் கணிதம் 50 என மொத்தமாக 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன.
பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் தேர்வின் தேர்வறை கண்காணிப்பாளர்களாகவும் செயல்பட்டனர்.
தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு அன்று பிரிக்கப்பட்டு தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியிலிருந்து தலைமையாசிரியர்கள் வினியோகித்தனர்.
வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள், தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.
மையங்களுக்கு வர முடியாதவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்துக்கு பொதுவான மையம் அமைக்கப்பட்டும், வீடுகளில் அவர்களை சந்தித்தும் ஆசிரியர்கள் தேர்வு நடத்தினர்.
Advertisement