உடுமலை:தளி கால்வாய் கரையை புதுப்பித்து, நீர் விரயத்தை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்களுக்கு, தளி கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேலும், அணை அருகே, நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டங்களும், இந்த கால்வாயை ஆதாரமாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால், கரைகள் இடிந்து பல இடங்களில் பரிதாப நிலையில் உள்ளது. தண்ணீர் திறப்புக்கு முன், புதர் மண்டி, கால்வாயை தேட வேண்டியுள்ளது.
மேலும், கால்வாயில், திறக்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட அளவு விரயம் ஆகிறது; வலுவில்லாத கரைகளை பயன்படுத்தி, நீர் திருட்டுக்காக துளைகள் அமைத்து, குழாய் பதிப்பது எளிதாகியுள்ளது.
இதனால், நீர் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உலக வங்கி நிதியுதவியில், பி.ஏ.பி., திட்டத்துக்குட்பட்ட சில கால்வாய்கள் புதுப்பிக்கப்பட்டன.
ஆனால், தளி கால்வாயில் எவ்வித சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. இதனால், பல இடங்களில் கரை மற்றும் ஷட்டர்கள் பராமரிப்பில்லாமல் பரிதாப நிலையில் உள்ளது.
'ஏழு குள பாசன திட்ட ஆதாரமாக உள்ள தளி கால்வாயை முழுமையாக சீரமைத்து, நீர் விரயத்தை தவிர்க்க உதவ வேண்டும். கால்வாயை சீரமைத்தால், அனைத்து குளங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்,' என தமிழக அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.