வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'காங்கிரஸ் மற்றும் ராகுலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பிரதமர் மோடிக்கும், மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக' காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் உட்கட்சி கூட்டத்தில் பேசுகையில், 'ராகுலின் சமீபத்திய லண்டன் பேச்சு தொடர்பாக பார்லி.,யை முடக்கி, பா.ஜ., வேண்டுமென்றே ராகுலை ஹீரோவாக்க முயல்கின்றனர்.
பா.ஜ., தனது சொந்த நலனுக்காக இதனைச் செய்கிறது. இதனால் மற்ற எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்னை குறித்து கேள்வி கேட்க முடியாது. அவர்கள் ராகுலை எதிர்க்கட்சிகள் முகாமின் கதாநாயகனாக்க முயற்சிக்கிறார்கள்' எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்., எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மம்தா பானர்ஜி பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ரகசிய ஒப்பந்தம் உள்ளது.
அமலாக்கத் துறை, சிபிஐ சோதனைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள மம்தா விரும்புகிறார். அதனால், அவர் காங்கிரஸுக்கு எதிராக பேசுகிறார். இதனால் பிரதமர் மகிழ்ச்சியடைவார். இவ்வாறு அவர் கூறினார்.