வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை பணிகள், வரும் டிசம்பருக்குள் முடிவடைகின்றன. இதையடுத்து, 'கூடுதலாக ஆறு சர்வீஸ் ரயில்கள் அதிகரிப்பதோடு, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
![]()
|
தமிழகத்தில் பிரதான ரயில்வே கனவு திட்டமான, சென்னை, எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி, தற்போது மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
திட்டப் பணிகள் தாமதம்
அடுத்த கட்டமாக, மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை, 2022ம் ஆண்டு மார்ச்சில் முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால், இந்த திட்டப் பணிகள் தாமதமாகின.
தற்போது, திருநெல்வேலி வரை, இரட்டை பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
130 கி.மீ., வேகம்
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டம், இந்த ஆண்டுக்குள் முடிந்து விடும்.
![]()
|
இதன் மூலம், தென் மாவட்டங்களுக்கு ஆறு சர்வீஸ் ரயில்கள் அதிகரிக்க முடியும்.
பெரும்பாலானவை புது ரயில் பாதைகள் என்பதால், 'சிக்னல்'களை மேம்படுத்தினால், தற்போதுள்ள விரைவு ரயில்களை, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.