வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ஹிந்து மக்கள் கட்சி சார்பில் துாத்துக்குடியில் நடைபெற உள்ள சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாட்டிற்கு அனுமதி கோரிய வழக்கில், மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:
ஹிந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாடு துாத்துக்குடி அபிராமி மகாலில் ஏப்.,1ல் துவங்கும்.

வள்ளலாரின் அவதார விழா, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி பூஜை, பெண்கள் கருத்தரங்கு, சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்குதல் நடைபெறும். துறவிகள், ஆதினங்கள் ஆசி வழங்குகின்றனர். கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.
ஏப்.,2 ல் டூவிபுரத்தில் ஊர்வலம் துவங்கி, சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்டில் நிறைவடையும். அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் இல்லை. இம்மாநாடு ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது.
மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை செயலர்,டி.ஜி.பி., துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வசந்தகுமார் குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.
தமிழக அரசு தரப்பு:அனுமதிக்கும் பட்சத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம், ஸ்டெர்லைட் ஆதரவு, எதிர்ப்பு ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி:மனுவை அரசு தரப்பில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.