சென்னை: புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை; உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாளில் 2 என்ற அளவில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை; உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. இன்ப்ளூன்ஸா காய்ச்சல் பாதிப்புக்கு தமிழகத்தில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாரந்தோறும் 35 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா 2ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா அதிகரித்தாலும் பதற்றப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.