வேலுார் : வேலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி அவரிடம் விசாரணை நடத்தினர்.
வேலுார் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இதற்கு அருகில் வேலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திட்ட இயக்குனராக ஆர்த்தி, 41, என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த 15 ம் தேதி மாலை வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் 20 போலீசார் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் நுழைந்து சோதனையில் நடத்தினர். அதில், அங்கிருந்த 13 பஞ்சாயத்து செயலாளர்களிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், வேலுார் மாவட்டத்தில் உள்ள ஏழு பஞ்சாயத்து யூனின்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் ஒரு பகுதி, திருப்பத்துார் மாவட்டம், மாதனுாரில் ஒரு பகுதி உள்ளிட்ட 248 கிராம பஞ்சாயத்துக்களில் இந்த ஆண்டுக்கான வரவு, செலவு தணிக்கை நடந்தது.தணிக்கை முடிந்து தடையில்லா சான்று பெற இந்த துறையை சேர்ந்த சில அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க பணம் எடுத்து வந்ததும், இதில் திட்ட இயக்குனர் ஆர்த்திக்கும் பங்கு கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இன்று காலை வேலுார் சத்துவாச்சாரியில் திட்ட இயக்குனர் ஆர்த்தி வசித்து வந்த அரசு பங்களா வீட்டில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் 20அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். கூடுதல் ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள திட்ட இயக்குனர் ஆர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: கடந்த 2019- 20ல் தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக ஆர்த்தி பணியாற்றி வந்த போது, ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2021 ம் ஆண்டு அவர் வேலுாருக்கு மாற்றப்பட்டார்.
இங்கும் அவர் மீது லஞ்சம் வாங்குவதாகவும், லஞ்ச பணத்தில் திருச்சி, தர்மபுரியில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தன.
இதையடுத்து தர்மபுரி நார்த்தம்பட்டியில் உள்ள ஆர்த்தியின் கணவர் சாந்தமூர்த்தி வீடு, திருச்சி காஜாமலை இ.பி., காலனியில் உள்ள ஆர்த்தியின் தந்தை கலைமணி, சத்துவாச்சாரியில் உள்ள ஆர்த்தியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சொத்துக்கள் சேர்த்தது குறித்து ஆர்த்தியிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.