வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஏற்கனவே 1970க்கு முன்பாக துவக்கப்பட்ட தெய்வீக பேரவை இருக்கும் நிலையில் இப்போது திடீரென ‛தெய்வீகப் பேரவை' என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பால் ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த அறிவிப்பில், பல பொய்கள், திரித்துக்கூறப்பட்ட தகவல்கள், சான்றுகள் இல்லாத தகவல் போன்றவை இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
![]()
|
இது தொடர்பாக ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளதாவது: 1970க்கு முன்பாக ‛தெய்வீகப் பேரவை' என்பது தருமை ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், அன்றைய குன்றக்குடி ஆதினம் ஆகியோர் உள்ளிட்ட ஒன்பது மடங்கள் ஒன்று சேர்ந்து தொடங்கிய அமைப்பு.
இதன் முக்கிய நோக்கங்கள் இந்து மத பிரச்சாரம், சைவ வைணவ பக்தி நூல்களை சிறப்பாக, அதே சமயம் குறைந்த விலையில் வெளியிடுவது போன்றவை. இதற்காக பெரிய கட்டடம் சென்னை ஆழ்வார்பேட்டை மஹாராஜா சூர்யா சாலையில் பேரவையின் பெயரில் வாங்கப்பட்டது. சில வருடங்களில் சரியான படி பேரவை இயங்காமல் ஆதினகர்த்தர்கள் இடையே மன வேற்றுமையும் வந்து பேரவை முடங்கியது.
பெரும் பொய்
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் அல்லவா. அதிக மதிப்புள்ள சென்னை தெய்வீக பேரவை கட்டடத்தை அறநிலையத்துறை கைப்பற்றி, அதைப் "பராமரிக்க" மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் வசம் ஒப்படைத்தது.
இது முழுக்க முழுக்க சட்ட விரோதம். 14.12.2020 அன்று தமிழக அரசு தான் வெளியிட்ட எண்.169 அரசாணையில் தெய்வீகப் பேரவை கட்டடம், ஸ்ரீ கபாலிஸ்வரர் கோயிலுக்குச் சொந்தம் என்ற பெரும் பொய்யை கூசாமல் சொன்னது. நீதிமன்றத்திலும் இந்தப் பெரும் பொய் சொல்லப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஸ்ரீ கபாலி கோயிலில் இருந்து எடுத்து கோயில்களை தணிக்கை செய்யும் துறை வசம் இந்தக் கட்டடத்தை ஒப்படைத்துள்ளது. இதுவும் சட்ட விரோதம். ஆக ஒன்பது மடங்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்தை கபளீகரம் செய்து விட்டது அறநிலையத்துறை. 1970 க்குப் பிறகு பலப் பல அமைப்புகள் தெய்வீகப் பேரவை என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டும், செய்யப்படாமலும் தமிழகத்தில் உலா வருகின்றன. இது ஒரு புறம் இருக்கட்டும்.

லெட்டர் பேட்
இரு நாட்களுக்கு முன்பாக தெய்வீகப் பேரவை என்ற புதிய அமைப்பு தங்கள் "லெட்டர் பேட்" மூலம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய, தேதி குறிப்பிடாத கடிதம் ஒன்று இணையதளங்களில் வலம் வந்தது.
இந்த புதிய அமைப்பு உண்மையான தெய்வீகப் பேரவை இல்லை என்பது நிச்சயம். காரணம் இந்த அமைப்பில் மிகப் பெரிய, பழமையான தருமை, திருவாவடுதுறை ஆதினங்கள் இல்லை. மேலும் இந்தக் கடிதத்தில் பிழைகளும், பொய்யுரைகளும் இருப்பதைப் பார்த்தால் தமிழறிவும், உண்மையான சைவ நெறிப் பயிற்சியும் உடைய ஆதினங்கள் இந்தக் கடிதத்தை எழுதி இருப்பார்களா என்ற சந்தேகம் நிச்சயம் வரும்.
யாரோ இந்து மத விரோதி, தமிழறிவில்லாமல் சரித்திர உண்மைகளைத் திருத்தி எழுதிய கடிதம் இது என்று நினைக்கத் தோன்றும். இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் எவ்வளவு தவறானவை என்பதைப் பார்ப்போம்.
முதலில், வடமொழி மீதும், வேத நெறியில் ஒரு கூறான சைவ சமயத்தின் உண்மை பழக்க வழக்கங்கள் மீதும் வெறுப்பை உமிழும் இந்த புதிய அமைப்பு ஏன் "தெய்வீகம்" என்ற சம்ஸ்க்ருத வார்த்தையையும், சபை என்ற சம்ஸ்க்ருத வார்த்தையில் இருந்து வந்த அவை என்ற வார்த்தையும் மட்டுமே கொண்டு தன் அமைப்பின் பெயரை வைத்துக்கொண்டது என்று தெரியவில்லை. இது வடமொழியை எதிர்க்கும் திமுக, உதயசூரியன் என்ற அழகான சம்ஸ்க்ருத வார்த்தையை வைத்து ஓட்டு கேட்பது போல் உள்ளது.
இந்த லெட்டர்பேட் கடிதத்தில் 18 விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றை தவறானவை, பெரும் தவறானவை, பொய்யுரை என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம். முதல் பத்தியில் தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்று சொல்லியுள்ளது இந்த புதிய அமைப்பு.
இது ஆளும் கட்சியினருக்கு கோபத்தை நிச்சயம் தரக் கூடும். பத்தி இரண்டில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் தினசரி வழிபாடு, பெருவிழாக்கள் என அனைத்தும் நடைபெற்று வருகின்றன என்ற வடிகட்டின பொய் சொல்லப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 35,000 கோயில்களில் ஒரு நாளைக்கு ரூ.30 கூட வருமானம் இல்லாமல் தினசரி பூஜைக்கே அந்தக் கோயில்கள் தத்தளிக்கும் நிலை தான் உள்ளது. இதில் இவற்றில் பெருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன என்று உண்மைக்குப் புறம்பாக இந்த லெட்டர்பேட் கடிதம் சொல்கிறது.
மூன்றாம் பத்தியில் தமிழக கோயில்களின் பெரும்பான்மை பண்டைய மன்னர்களால் கட்டப்பெற்றன என்ற மற்றொரு பொய் சொல்லப்பட்டுள்ளது. 44,000 கோயில்களில் சுமார் 10,000 கோயில்கள் மட்டுமே 200 வருடங்களுக்குப் பழமையானவை. அவற்றில் ஓர் ஆயிரம் கோயில்கள் கூட சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டவை அல்ல.
நான்காம் பத்தியில், பண்டைய காலங்களில் திருக்கோயில்களில் குடமுழுக்கு, விழாக்கள், பெருவிழாக்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே நடைபெற்றன என்ற பெரிய பொய் கூசாமல் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான சான்றுகள் எவையும் தரப்படவில்லை. காரணம் - அப்படி சொல்கின்ற சான்றுகள் என்றுமே இருந்ததில்லை.
![]()
|
சங்க காலம் தொடங்கி சோழ, பாண்டியர், பேரரசு காலமான 13ம் நூற்றாண்டு வரை நான்கு வேதங்களும், ஆகமங்களும், வடமொழியும் மன்னர்களால் கொண்டாடப்பட்டுள்ளதை தாம் பார்க்கின்றோம். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இயற்றிய வேத நெறி யாகங்கள் குறித்து புறநானூறு சொல்கிறது. 63 நாயன்மாரில் ஒருவராம் நின்றசீர் நெடுமாறர் அரிகேசரி பராங்குசப் பாண்டியன் என்று அறியப்படுகிறார். இவர் "சந்திரசேகரருக்கு" (சிவபெருமானுக்கு) பல கோயில்கள் எடுத்தவர்.
தமிழில் வேள்விகள்
இந்தப் பாண்டியர் இயற்றிய செப்புப் பட்டயத்தில் சோழ தேசம் காவிரியின் கரையில் உள்ள பெருமருதூர் என்ற ஊரைச் சேர்ந்த நாராயண பட்ட சோமயாஜி என்ற அந்தணரை - இவர் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், 18 தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், வேதாந்தம், சித்தாந்தம் அறிந்தவர் என்று பாராட்டி அவருக்கு ஒரு பிரம்மதேயமாக நிலங்கள் கொடுக்கப்பட்டது ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
சிவபெருமான் சந்தோக சாம வேதம் ஓதுபவர் என்று திருவீழிமிழலைத் தலத்து தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியமும் வேதத்தை "அந்தணர் மறை என்றே குறிப்பிடுகிறது. தமிழில் வேள்விகள் இயற்றப்பட்டன. கோயில் பூசைகள் நடத்தப்பட்டன என்று கூறுவதற்குச் சான்றே இல்லை என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை.
பத்தி 5ல் தமிழ் மன்னர் ஆட்சிக் காலத்திற்கு பிறகு வந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் சமஸ்க்ருத வழிபாட்டை சிறிது சிறிதாகக் கொண்டு வந்துள்ளனர் என்ற பொய் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாம் அறிந்த வரையில் தமிழ் மன்னர் காலத்திற்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வந்த புதிய சமூகத்தினர் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் தாம். அவர்கள் எதற்காக சமஸ்க்ருதத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்? அப்படி எதுவும் அவர்கள் செய்யவில்லை.
ஆதாரம் இல்லை
பத்தி 6, 7, 8ல் பெரும் பொய்களை இந்த லெட்டர்பேட் அமைப்பு சொல்லியுள்ளது. அதாவது தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களில் வடமொழி வழிபாடுகள் நடந்த சான்றுகளே இல்லை, கருவூர்த்தேவர், நம்பியாண்டார் நம்பி போன்ற சான்றோர்கள் வடமொழியில் குடமுழுக்கு நடத்தியதாக சான்றுகள் இல்லை என்பன - பெரும் பொய், திரித்து கூறப்பட்டவை.
முதலில் கருவூர் தேவரோ அல்லது நம்பியாண்டார் நம்பியோ அந்தக் கோயில்களுக்கு எந்த மொழியிலும் குடமுழுக்கு செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்களே இல்லை.
"மகுடாகமம்" எனும் ஆகம நெறியிலும் "மகா சாயிகா பதம்" என்ற "பத-விந்நியாச அடிப்படையிலும், எழுப்பப்பட்டதே "ராஜராஜேச்சரம்" என்னும் தஞ்சைப் பெரிய கோயில் ஆகும் என்பதை ராஜ ராஜ சோழன் கல்வெட்டில் ஆவணப் படுத்தியுள்ளார்.
இப்படி கல்வெட்டு ஆதாரத்தையே மாற்றி பொய்யுரைப்பதை உண்மைச் சைவ சமய ஆதீனங்கள் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டார்கள் என்பதாலேயே இந்த லெட்டர்பேட் கடிதம் இவர்களால் எழுதப்பட்டிருக்காது என்று எண்ண வேண்டியுள்ளது.
மேலும் பத்தி 9ல் உலகறிந்த உன்னத தெய்வப் பாடல்களான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை, நாலாயிர திவ்ய "பிரபஞ்சம்" என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால் சமய அறிவும், தமிழ் அறிவும் உள்ள ஆதீனங்கள் நிச்சயமாக இந்தக் கடிதத்தை எழுதவில்லை என்றே சொல்லிவிடலாம்.
முட்டாள்தனமான பிழை
இவ்வளவு முட்டாள்தனமான பிழை தமிழ் அறிந்த எவரும் செய்ய மாட்டார்கள். “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறது தொல்காப்பியம். வேதத்தின் வழி வாழ்வும், வாழ்விற் பயனும், இம்மையும் மறுமையும், இறுதிப் பேருண்மையும் அறியலாம்.
சைவ சமய நூல்கள் சிவமே வேதம் - வேதமே சிவம் என்று கூறுகின்றன. இந்த உண்மையை மனதாரப் புரட்டுபவர்கள் உண்மைச் சைவர்கள், தமிழர்கள் அல்லர். இந்த புது அமைப்பின் பேரில் வந்த கடிதத்தில் மேலும் பல பிழைகள் பொய்யுரைகள்.
உளறல்
17ம் பத்தியில் கைபர் போலன் கணவாய் சிந்து சமவெளியில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் வடமொழி வழிபாட்டை தொடங்கினர் என்று கூறியுள்ளதைப் பார்த்தால், இந்துக்களை பிரித்தாள விரும்பிய ஐரோப்பிய வந்தேறிகள் கூறிய ஆதாரமே இல்லாத பொய்களை வழிமொழிவது தான் இவர்கள் நோக்கமோ என கேட்கத் தோன்றுகிறது. முகலாய பேரரசிற்கு பின்னால் தான் இந்திய நாட்டிலேயே வடமொழி வழிபாடுகள் நுழைந்தன என்று 16ம் பத்தியில் இவர்கள் குறிப்பிட்டுள்ளது உளறலின் உச்சம்.
ஒரு விஷயத்தை இவர்களும், தமிழ் இந்துக்களும், அரசும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். 1972'ல் வந்த தீர்ப்பில் உச்சமன்ற தீர்ப்பில், நிலை நிறுத்தப்பட்ட வழிபாட்டு பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது என்றே அதன் கூறுகிறது.
எந்த மதத்தின் பழக்கத்தில் வெகு காலமாக செய்யப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளை, நீதிமன்றமும் கூட மாற்ற முடியாது என்பதே இந்த நாட்டின் ஒப்பற்ற அரசியல் நிர்ணயச் சட்டம். அவ்வாறு இருக்கையில் இவர்கள் இந்த லெட்டர்பேட் மூலம் தமிழில் குடமுழுக்கு முதலிய வழிபாடுகள் கோயில்களில் செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது, இவர்களுக்கு சட்டமும் தெரியவில்லை என்பதையே காண்பிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.