சென்னை: பட்டாசு ஆலைகளை தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய ரக மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டாசு ஆலை குடோனில் இன்று(மார்ச் 22) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில், 8 பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பா.ஜ., சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு, தமிழக அரசு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். இனியும் இது போன்ற வெடி விபத்துக்கள் நடக்காமல் தடுக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அதற்கான பயிற்சியையும் பட்டாசு ஆலைகள் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அவற்றை உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.