வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'கடன் சுமை அதிகரித்துள்ளதால், இப்போதைக்கு புது திட்டங்கள் குறித்து, சட்டசபையில் கோரிக்கை விடுக்க வேண்டாம்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், நிதியமைச்சர் தியாகராஜன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியுள்ளதை ஒட்டி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
ஒரு மாதம் கூட்டத் தொடர் நடப்பதால், யார் யார் பேசுவது, எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பினால், எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலினும், மூத்த அமைச்சர்களும் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.,க்கள், 'மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க வேண்டும். இல்லையெனில், பணம் கிடைக்காதவர்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்.

'அதுபோல, சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்க வேண்டும்; மக்கள் கேட்கின்றனர்' என, வலியுறுத்தியுள்ளனர். மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள், 'அரசு துறைகளில் காலியாக உள்ள, 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்புவோம் என, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்.
'அங்கன்வாடி, சத்துணவு, போக்குவரத்து, ரேஷன் கடைகளில் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தொகுதிக்கு சென்றால் கட்சியினரும், பொது மக்களும் இதுபற்றியே கேட்கின்றனர்' என கூறியுள்ளனர். பல எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி, மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் வழங்கியுள்ளனர்.
மனுக்களை வாங்கிய அமைச்சர்கள், 'திட்டங்களை செயல்படுத்த நாங்கள் தயார். ஆனால், நிதியமைச்சர் நிதி வழங்க வேண்டுமே...' என, பதிலளித்துள்ளனர். இதனால் எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள், நிதியமைச்சரை நோக்கி திரும்பியுள்ளன.
அவர்களுக்கு பதிலளித்து நிதியமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளதாவது:
வரி வருவாய் அதிகரித்தாலும், தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. நிதி நிலைமையை சரி செய்து, குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம். ஏற்கனவே, பல நலத் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.
இனி, அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களை உருவாக்குவதுதான் என் பணியாக இருக்கும். அறிவித்த பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதே கடினமாக இருக்கும்போது, இப்போதைக்கு புதிய திட்டங்களுக்கு வாய்ப்பு இல்லை. எனவே, சட்டசபையில் புதிய திட்டங்களை கேட்டு, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.