மாஸ்கோ: 'இந்தியாவில் நடக்கும் 'ஜி - 20' அமைப்பின் மாநாட்டில், உக்ரைன் மீதான போர் குறித்து பேசக் கூடாது' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஓராண்டைக் கடந்த நிலையிலும் போர் தொடர்கிறது. இந்நிலையில், நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜின்பிங் ரஷ்யா சென்று, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.
பின் அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைன் மீதான போர் குறித்து, சர்வதேச அமைப்புகளில் தேவையில்லாத விவாதங்கள் நடக்கின்றன. இதை வைத்து சர்வதேச அரசியல் விளையாட்டு நடத்துவதை எதிர்க்கிறோம்.

இந்தியாவில் நடந்த, ஜி - 20 அமைப்பின் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்போது, இது தொடர்பாக விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்தோம். அதையடுத்து, இந்தப் பிரச்னை குறித்து பேசப்படவில்லை. அதுபோலவே, புதுடில்லியில் நடக்க உள்ள ஜி - 20 மாநாட்டிலும், இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இந்தோ - பசிபிக் பாதுகாப்பு முறை என்ற பெயரில், இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு எதிரான முயற்சிகளில் சில நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதை விடுத்து, ஆசியா - பசிபிக் பாதுகாப்பு முறை குறித்து விவாதிக்க வேண்டும். இது, அனைவரையும் உள்ளடக்கியதாக, வெளிப்படையானதாக இருக்க வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.