சென்னை: திமுக பிரமுகர் ஆயிஷா அவமரியாதை செய்ததால், உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன் தற்கொலை செய்துள்ளார். கட்சியினர் என்பதால் குற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு கோரி சுடலைமாடன், உடன்குடி பேரூராட்சி முன்னாள் பேரூராட்சித் தலைவியுமான ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை அணுகியுள்ளார்.
அப்போது சுடலைமாடனிடம் ஆயிஷா பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால் அவரை ஜாதி பெயரை சொல்லி திட்டி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விஷம் குடித்த சுடலைமாடன் 55, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (மார்ச் 23) உயிரிழந்தார்.
இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த சுடலைமாடன் தற்கொலை செய்துள்ளார்.
திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எளிய மக்கள் மீதான ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. குற்றவாளிகள் தங்கள் கட்சிக்காரர்கள் என்பதால் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கைக் கையாளுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன
மீண்டும் இது போன்ற ஜாதியக் கொடுமைகள் நடக்காத வண்ணம், உடனடியாக குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக பாஜ., சார்பில் சார்பாக வலியுறுத்துகிறேன்.
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்:
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.