ராமநாதபுரம் : ''தமிழக மீனவர்களை காக்கும் கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது''என, ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் துரை தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்படையால் தாக்கப்படுகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக தாக்குதலின் வீரியம் அதிகமாகி உள்ளது.
தமிழக மீனவர்களை காப்பதற்கான கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா தான் உதவி செய்கிறது. தமிழக மீனவர்களை தாக்க கூடாது என்று மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். இலங்கையிடம் இருந்து நம்மீனவர்களின் உரிமைகளை பெற்று தர தமிழக பா.ஜ.,விற்கு பொறுப்பு இருக்கிறது. அ.தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., விரைவில் பா.ஜ.,வை விட்டு வெளியே வர வேண்டும், என்றார்.