வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மோடி என்னும் சமுதாயத்தை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்., எம்பி., ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ராகுல் தனது சமூக வலைதளத்தில், ‛இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
மோடி என்று முடியும் பேர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றனர் என்று ராகுல் கர்நாடகாவில் பிரசாரத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். இதனை பா.ஜ., எம்எல்ஏ ஒருவர் சூரத் கோர்ட்டில் அவதூறு பரப்புவதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து லோக்சபா செயலர் உத்பால்குமார் சிங் ஒரு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இதில் மக்கள் பிரதிநித்தவ சட்டப்படி ராகுல் எம்பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்படி தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே இந்த சட்ட விதிகளின்படி, ராகுல் எம்.பி. பொறுப்பை இழந்துள்ளார்.

தடை
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ராகுல் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தண்டனை காலமான 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு பிறகு 6 ஆண்டுகள் ராகுல் போட்டியிட முடியாது.
இந்த நடவடிக்கைக்கு காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம்ரமேஷ் கூறியதாவது: ஜனநாயகத்தின் எதிரான குரலை நெரிக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், அமைதியாக இருக்க மாட்டோம். என்றார்.
பிரியங்கா கண்டனம்
ராகுல் மீதான தகுதி நீக்க நடவடிக்கை ஒரு பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.