பொதட்டூர்பேட்டை:புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அருகே, பொம்மராஜிபேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கணபதி, 50, வணிக ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 32, தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளார். அவரிடம், கணபதி 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து பிரகாஷ், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி நேற்று காலை பொம்மராஜிபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்த கணபதியிடம், பிரகாஷ் பணம் கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணபதியை கைது செய்தனர்.