வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை:சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு தேர்வானோர் பட்டியலில் நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அவர்களை பரிசீலித்து மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட உத்தரவிட்டது.
தற்காலிக அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு நேரடி நியமனம் மேற்கொள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. சித்த மருத்துவம், பி.டி.எஸ்., படித்த சிலர் விண்ணப்பித்தனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர். வாரியம் வெளியிட்ட தேர்வானோர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை. சித்த மருத்துவம், பி.டி.எஸ்., படித்தவர்களின் பெயர்களை பரிசீலிக்கவில்லை. நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிலர் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.மனுதாரர்கள் தரப்பு: வெளியான தேர்வானோர் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். மனுதாரர்களின் பெயர்களை பரிசீலித்து புதிய தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் தரப்பு: இப்பிரச்னையில் ஏற்கனவே பிற உயர்நீதிமன்றங்கள் உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அதனடிப்படையில் இம்மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: உணவு பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு உணவு தொழில்நுட்பம் அல்லது பால் தொழில்நுட்பம் அல்லது உயிரி தொழில்நுட்பம் அல்லது எண்ணெய் தொழில்நுட்பம் அல்லது வேளாண் அறிவியல் அல்லது கால்நடை அறிவியல் அல்லது உயிர் வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது முதுகலை வேதியியல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பெற்ற இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்தில் இளங்கலை பட்டம் என்பது நவீன அறிவியல் மருத்துவத்தை மட்டுமே குறிக்கும். அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவத்தை உள்ளடக்கியது. அது எம்.பி.பி.எஸ்., பட்டத்தை குறிக்கிறது. சித்தா போன்ற மருத்துவ முறைகள் அல்ல என அரசு தரப்பு கூறுகிறது. மருத்துவத்தில் பட்டம் என்பதை விரிவாக புரிந்து கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையால் வழங்கப்படும் மருத்துவ பட்டமானது விதிகளுக்குட்பட்டது.
சித்த மருத்துவ முறை தமிழகத்தின் தனிச்சிறப்பு. இது தமிழ் கலாசாரத்தின் ஒரு பகுதி.
தமிழக கோயில்களில் சித்த மருந்தகம் செயல்பட்டது. அதன் தற்போதைய நிலை தெரியவில்லை. சித்தா துறை ஆய்வுகள் மேற்கொள்கிறது. கொரோனா நெருக்கடியின்போது சித்தா டாக்டர்கள் ஆற்றிய பங்கை மறந்துவிட முடியாது. டெங்கு பரவியபோது நிலவேம்பு கஷாயம் வழங்குவதை அரசு ஊக்குவித்தது.
சித்தா பட்டதாரிகளை தேர்வு பட்டியலிலிருந்து தகுதி நீக்கம் செய்வது சித்தா அமைப்பை நவீனமற்றது என்று முத்திரை குத்துவதற்கு சமம். எந்த அமைப்பும் பழமையானதாக அல்லது நவீனமாகவோ இருக்கலாம். அது காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளதா, நமது தேவைகளுக்கு பொருத்தமானதா என்பதுதான் கேள்வி. சித்த மருத்துவம் உயிர்ப்புடன் நடைமுறையில் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சித்த மருத்துவக் கல்லுாரிகளை அரசு நடத்துகிறது. அதில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்., அல்லது சித்தா என ஏதேனும் மருத்துவப் படிப்படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
பி.டி.எஸ்., என்பது பல் மருத்துவத்தை கையாள்வது. அங்கீகரிக்கப்பட்ட நவீன மருத்துவ முறை. உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு பரிசீலிக்க மனுதாரர்கள் தகுதியுடையவர்கள் என கருதுகிறேன். மனுதாரர்களை நீக்கிய தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களை பரிசீலித்து மாற்றியமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.