கரூர்-நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது.
கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில், கார்வாழி பஞ்சாயத்தில், ஆத்துப்பாளையம் அணை உள்ளது. கடந்த, ஒரு மாதமாக அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று அதிகாலை வரை, 69 மி.மீ., மழை பெய்தது. இதையடுத்து, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, ஆத்துப்பாளையம் அணைக்கு வினாடிக்கு, 17 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 13.90 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மாயனுார் கதவணை
காவிரி ஆற்றில், மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 933 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 876 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும், ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 121 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 40 கன அடி திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.14 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 38.81 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் க.பரமத்தியில் மட்டும், 1.6 மி.மீ., மழை பதிவானது.