திருப்பூர்-'திருப்பூர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படும், தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டுக்கடன் வசதிகளை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா கூறியதாவது:
திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 'இ-நாம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் விளைப் பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வேளாண் விளைப் பொருட்கள் விலை வீழ்ச்சியடையும் போது, விளைபொருட்களை குறைந்த வாடகையில், ஆறு மாதம் வரை பாதுகாப்பாக இருப்பு வைத்து, விலை உயரும் போது, விற்பனை செய்யும் வகையில் கிடங்கு வசதியும் உள்ளது.
கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக, 9 சதவீத வட்டியில், அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.