நாமக்கல்,--'வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் பண்ணைகளில், போலீசார் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படும்' என, கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள், அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில், சில விஷமிகளால் ஏற்பட்ட வதந்திகளால், வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அச்சமின்றி பணிபுரிய, போலீசார் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு
வருகின்றன.
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணிபுரியும், பணியாளர்களுக்கு ஏதேனும் அச்சம் இருப்பின், பண்ணையாளர்கள் விருப்பப்பட்டால், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் நேரடியாக பண்ணைகளுக்கே வந்து, வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி உதவிகளை செய்துகொடுத்து, அவர்களிடம் உள்ள அச்சத்தை போக்க உள்ளனர்.
எனவே, வடமாநில பணியாளர்களை பணியமர்த்தியுள்ள பண்ணையாளர்கள், தங்கள் பணியாளர்களுக்கு, போலீஸ் துறை மூலம் அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்க விரும்பினால், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியனை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.