நாமக்கல்,--தமிழக அரசின் தொழிலாளர் துறை மூலம், 'தொழில் நல்லுறவு விருது' பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை மூலம், 2017, 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான, 'தொழில் நல்லுறவு' விருது (குட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் அவார்ட்) வழங்கப்பட உள்ளது. வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும். நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு, 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விபரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு மார்ச், 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்ப கட்டணமாக, விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால், 100 ரூபாயும், வேலையளிப்பவரானால், 250- ரூபாயும், ஆன்லைன் மூலம் செலுத்தி, அதற்கான அசல் சலானை இணைத்து அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.