கள்ளக்குறிச்சி : கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த வி. பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சுப்பிரமணி, 40; கடந்த 17.04.2021 அன்று மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சுப்பிரமணி சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது அத்தை இந்திரா அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
சுப்பிரமணியின் மனைவி செல்வி 37; அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயமுருகன், 45; என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால், சுப்பிரமணிக்கும் செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
செல்வியும், அவரது கள்ளக்காதலன் ஜெயமுருகனும் சேர்ந்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி செல்வி, கடந்த 16.04.2021 அன்று ஜெயமுருகன் வாங்கி கொடுத்த விஷத்தை மதுவில் கலந்து வைத்துள்ளார்.
விஷம் கலந்த மதுவை குடித்ததால் சுப்பிரமணி இறந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, செல்வி, ஜெயமுருகனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. செல்வி மற்றும் ஜெயமுருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.31,500 அபராதம் விதித்து நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜவேல் ஆஜரானார்.