பனமரத்துப்பட்டி : ""உளுந்து செடிகளுக்கு இலைவழி உரம் கொடுப்பதால், பூக்கள் உதிர்வது குறைந்து மகசூல் அதிக்கும்,'' என்று சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் பரவலாக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை விதைப்புடன் பச்சைப் பயறு மற்றும் தட்டைப் பயறு வகைகளை ஊடுபயிராக விதைக்கின்றனர். உளுந்து, பச்சைப் பயறு, தட்டைப் பயறு ஆகியவை பூக்கும் தருவாயில் நோய் தாக்கி பூக்கள் உதிர்ந்துவிடுவதால், விளைச்சல் பாதிக்கின்றது. பெரும்பாலான விவசாயிகள் உளுந்து தனியாகவும் விதைக்கின்றனர். உளுந்து செடியில் அதிக அளவில் பூக்கள் உதிர்ந்து விடுவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.இதை தடுப்பது குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பயிர் வினையியல் துறை பயறு வகை பயிர்களுக்கான டி.என்.ஏ.யு. பயறு ஓண்டர் என்ற டானிக் வெளியிட்டுள்ளது. சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் சுக்கம்பட்டி விவசாயி மகேந்திரன் தோட்டத்தில் வம்பன் 5 என்ற புதிய ரக உளுந்து விதை உற்பத்தி திடல் அமைக்கப்பட்டுள்ளது.
ஊளுந்து செடிகள் பூக்கும் தருவாயில் உள்ளதால், பூ உதிர்வதை தடுக்க இலைவழி உரம் கொடுப்பது சிறந்தது. ஒரு ஏக்கருக்கு 2.25 கிலோ டி.என்.ஏ.யு. பயறு ஒண்டர் டானிக்கை 200லிட்டர் தண்ணீரில் கலந்து தேவையான ஒட்டு திரவம் சேர்த்து கைதெளிப்பானில் தெளிக்கலாம். இலை வழி உரம் இடுவதால், வறட்சியை தாங்கி, பூ உதிர்வதை குறைத்து 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE