வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஒரே டிக்கெட்டில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான திட்டத்துக்காக புதிய 'ஆப்' உருவாக்க வேண்டும் என, உலக வங்கி பிரதிநிதிகள் பரிந்துரைத்து உள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து திட்டங்களை, ஒரு குடையின் கீழ் செயல்படுத்துவதற்காக, 2010ல் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் 'கும்டா' உருவாக்கப்பட்டது. இந்த குழுமம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்படுகிறது.
இந்நிறுவனம் சார்பில், போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தலைமையில், துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சார்ந்த அரசு துறைகளின் அதிகாரிகள், இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

240 இடங்கள்
'கும்டா' துணைக்குழுவுடன், உலக வங்கி பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டம், சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் பல்வேறு வகை போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ள இடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 240 இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து சேவைகளின் சந்திப்பு நிகழும் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
இதில், 40 இடங்களில், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. மற்ற இடங்களில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
போக்குவரத்து சேவைகள் ஒருங்கிணைப்பு இடங்களில், மேம்பாட்டு திட்டங்கள் ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை பெறுவது, செலவிடுவது, பணிகளுக்கு ஒப்புதல் வழங்க ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
ஒரே டிக்கெட் பயணம்
ஒரே டிக்கெட்டில், பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் பயணிப்பதற்கான திட்டம் தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து, 'கும்டா' அதிகாரிகள், உலக வங்கி பிரதிநிதிகளுக்கு விளக்கினர்.
இதில் 'கியூ.ஆர்., கோட்' முறையில் டிக்கெட் வழங்குவதற்கு அனைத்து துறையினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரே டிக்கெட் பயண திட்டத்துக்காக பிரத்யேக 'ஆப்' உருவாக்க வேண்டும் என்றும் இதன் வாயிலாக மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், உலக வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இதற்காக, தானியங்கி முறையில் டிக்கெட் வழங்கல் உள்ளிட்ட பணிகளுக்கான நவீன கருவிகள் வாங்கும் பணிகளை துவங்கி இருப்பதாக, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.