திருநெல்வேலி, : கைதானவர்களை விசாரிக்கும் போது பற்களை பிடுங்கிய திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அம்பாசமுத்திரம் துணைக்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக ஆகஸ்ட் முதல் இருந்தவர் பல்வீர்சிங். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 2020 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் குற்றங்களில் ஈடுபட்டு கைதாகியவர்களை விசாரிக்கும் போது குறடு கொண்டு பற்களை பிடுங்குவதாகவும் அதன் பிறகு கூழாங்கற்களை வாயில் போட்டு மெல்லச் செய்வதாகவும் புகார் எழுந்தது.
அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா குடிபோதையில் தெருவில் இருந்த 'சிசிடிவி' கேமராக்களை உடைத்து சேதப்படுத்தினார். ஏ.எஸ்.பி., மற்றும் போலீசார் அவரது பற்களை பிடுங்கினர்.
இதேபோல் 14க்கும் மேற்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டன. கடும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி குடும்ப பிரச்னைகளில் வரும் கணவர்களின் பற்களையும் பிடுங்கியதால் அவரது விசாரணை முறை சர்ச்சைக்குள்ளானது. புகாரின் பேரில் சம்பவம் குறித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது ஆலம் சபீர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதனால் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங்கை சென்னையில் போலீஸ் தலைமையிட காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அம்பாசமுத்திரம் புதிய டி.எஸ்.பி.,யாக வெங்கடேசன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:குற்றம் எதுவாக இருந்தாலும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல் துறையிடம் இருந்தே பொது மக்கள் பாதுகாப்பு தேடும் அவலம் மிகவும் வருந்தத்தக்கது.ஏற்கனவே தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் காவல் நிலைய மரணங்களால் பொது மக்கள் காவல் துறை மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் இதுபோன்ற மனித தன்மையற்ற தாக்குதல்கள் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தும்.உடனே தி.மு.க. அரசு தகுந்த விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றம் செய்தவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கவும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்கவும் காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.