ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி கல்லுாரி மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் உறவு கொண்டு அதை அலைபேசியில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதுடன் திருமணம் செய்ய மறுத்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விக்னேஸ்வரனுக்கு 23, சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விக்னேஸ்வரன் பி.இ., இரண்டாமாண்டு படித்த போது 2020ல் அலைபேசி மூலம் சிவகாசியை சேர்ந்த 17 வயது முதலாமாண்டு கல்லூரி மாணவி ஒருவருடன் பழகினார். 2021 பிப்.,ல் டூவீலரில் சிவகாசிக்கு வந்து அந்த மாணவியுடன் பாலியல் உறவு கொண்டார். மாணவிக்கு தெரியாமல் அதை வீடியோ எடுத்தார்.
இந்நிலையில் திருமணம் செய்யும்படி மாணவி வலியுறுத்திய நிலையில் மறுத்த விக்னேஸ்வரன் பாலியல் உறவு கொண்ட வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறினார். வேதனையடைந்த மாணவி 2021 பிப்., 5 வீட்டின் மாடியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்னேஸ்வரனை சிவகாசி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார். விக்னேஸ்வரனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.