வந்தவாசி : வந்தவாசி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது கண்டெடுக்கப்பட்ட பிரம்ம சூத்திர குறியீடுடன் கூடிய சிவலிங்கத்தை மக்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. பணியாளர்கள் சாலை போட, மேடு பள்ளங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வேப்பமரத்தடியில், பிரம்ம சூத்திர குறியீடுடன் கூடிய சிவலிங்கம் தென்பட்டது.
அப்பகுதி மக்கள் லிங்கத்தை மீட்டு, வேப்பமரத்தடியில் பீடம் அமைத்தனர். பால், பன்னீர் அபிஷேகம் செய்து, பூஜை செய்து வழிபட்டனர். எட்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. சிவலிங்கத்தை வழிபட சுற்றுவட்டார கிராம மக்களும் வந்து செல்கின்றனர்.