வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ஹிந்து மக்கள் கட்சி சார்பில் துாத்துக்குடியில் ஏப்.1ல் நடைபெற உள்ள சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாட்டிற்கு அனுமதிக்க போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலர் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:
ஹிந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாடு துாத்துக்குடி அபிராமி மகாலில் ஏப்.1ல் துவங்குகிறது. வள்ளலாரின் அவதார விழா, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி பூஜை, பெண்கள் கருத்தரங்கு, சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்குதல் நடைபெறும். துறவிகள், ஆதினங்கள் ஆசி வழங்குகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.
ஏப்.,2 ல் டூவிபுரத்தில் ஊர்வலம் துவங்கி, சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்டில் நிறைவடையும். அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். இம்மாநாடு ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை செயலருக்கு மனு அனுப்பினோம்.

துாத்துக்குடி மத்திய பாகம் போலீசார், 'ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியுள்ளார். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் அதிருப்தியில் உள்ளனர். ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலம், பொதுக்கூட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதி மறுக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.
சமூக நல்லிணக்கம், பழமையான தமிழ் கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது. நிராகரித்த உத்தரவிலுள்ள காரணங்கள் ஏற்புடையதல்ல. அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வசந்தகுமார் குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.
தமிழக அரசு தரப்பு: அனுமதிக்கும் பட்சத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதிக்க தேவையில்லை.மனுதாரர் தரப்பு: ஏப்.1ல் மகாலில் கூட்டம் நடத்திக் கொள்கிறோம். ஏப்.2ல் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த விரும்பவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: ஏப்.,1 ல் மகாலில் உள்ளரங்க கூட்டம் நடத்திக் கொள்ளலாம். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என மனுதாரர் தரப்பில் போலீசாரிடம் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் போலீசார் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.