சென்னை, பக்தர்களின் 'சிவநாமம்' விண்ணைப் பிளக்க, மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
தொண்டை மண்டல சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். ஆண்டுதோறும் பங்குனி மாதம், 10 நாட்கள் பெருவிழா விமரிசையாக நடக்கும்.
அந்தவகையில், இந்தாண்டிற்கான பங்குனி பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
அதைத் தொடர்ந்து, காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை, பக்தர்களின் 'சிவநாமம்' விண்ணைப் பிளக்க, கொடியேற்றம் நடந்தது. இந்த விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். பின், விமான சேவை நடந்தது.
நேற்று இரவு அம்மை, மயில் வடிவத்தில் சிவபூஜை காட்சியும், புன்னை, கற்பக, வேங்கை மர வாகனங்கள் புறப்பாடும் நடந்தது. இன்று காலை 9:15 மணிக்கு வெள்ளி சூரிய வட்டம், இரவு 9:00 மணிக்கு சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
நாளை காலை அதிகாலை 5:45 மணிக்கு அதிகாரநந்தி காட்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, கந்தர்வன், கந்தர்வி, மூஷிகம், வெள்ளிவிடை வாகனங்கள் புறப்பாடும், திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடக்கிறது. ஏப்., 1ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி நடக்கிறது.
பங்குனி பெருவிழாவின் பிரதான நிகழ்வாக ஏப்., 3ம் தேதி காலை 6:30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:25 மணிக்கு பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, 4ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறும். எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது.
திருஞான சம்பந்தர் எழுந்தருளல், எலும்பை பூம்பாவையாக்கி அருளல் நடக்கிறது. மாலை 2:45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது.
ஏப்., 5ம் தேதி ஐந்திரு மேனிகள் விழா நடக்கிறது. ஏப்., 6ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் ஹரிஹரன், அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அதிகாரநந்தி சேவை, தேர், அறுபத்து மூவர் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும் போலீசார் சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாடவீதிகளை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.அதேபோல, நான்கு வீதிகளிலும் 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. முக்கிய விழாக்களில், 100க்கும் மேற்பட்ட போலீசார், பக்தர்களோடு பக்தர்களாக கலந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.