திருமங்கலம்: திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் அரவான் களப்பலி நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை கல்லுாரி வரலாற்று துறை மாணவர் சிலம்பரசன் தெரிவித்தார். அங்கு வரலாற்று ஆர்வலர்கள் களஆய்வு செய்தனர். நாயக்கர் கால சிற்பங்களான அவற்றில், 3 அடி உயரம், 2 அடி அகல பலகைக் கல்லில் 'அரவான் களப்பலி' புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மனிதத் திருமேனியும், பன்றியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர் நீண்டகாலமாக சேவல், ஆடு, பன்றி என முப்பலி கொடுத்து வந்துள்ளனர். அதில் ஒன்று இப்பலி.
இச்சிற்பத்தில் ஒரு மனித உருவம் இடம் பெற்றுள்ளது. இவர் ஓர் அரவான். இவர் ஊர் நலன் கருதி, போரில் வெற்றி பெற, தன்னுயிரை தானே முன்வந்து களப்பலி கொடுப்பதே அரவான் களப்பலி. இது போன்ற சிற்பம் தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சிற்பத்தில் ஒரு அரவான் நிர்வாணமாக வணங்கியபடி வேண்டுதலை நிறைவேற்ற தயாராக உள்ளது போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிதானது.
சதிக்கல் 1
இந்த சிற்பமும் அதே இடத்தில் காணப்படுகிறது. தலா 2.5 அடி உயரம், அகலம் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. இதில் ஓர் ஆண், ஒரு பெண் இடம் பெற்றுள்ளனர். ஆணின் வலது கையில் கத்தியை உயர்த்தி பிடித்தும், இடது கையில் கேடயம் பிடித்து, இடையில் குறுவாள் சொருகி், தலையில் இடப்புறம் சரிந்த கொண்டை, மார்பில் அணிகலன்கள், இடையில் கச்சை, கால்களில் வீரக்கழலையுடன் கம்பீரமாக நிற்கும் கோணத்தில் வீரன் செதுக்கப்பட்டுள்ளார். இவ்வீரன் போரில் வீரமரணம் அடைந்திருக்க வேண்டும். மனைவி உடன் கட்டை ஏறி இருக்க வேண்டும். ஆகவே இந்த சதிக்கல்லை இருவரின் நினைவாக நட்டு வைத்துள்ளனர்.
சதிக்கல் 2
இந்த சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டது. தலைக்கு மேல் நாசிக்கூடு செதுக்கப்பட்டுள்ளது. வீரன் வலது கையில் வாளை உயர்த்திப் பிடித்தபடி, இடையில் குறுவாள் சொருகியவாறு, இடது பக்கம் சரிந்த கொண்டை , மார்பில் ஆபரணம், காலின் ஓரம் ஒரு மதுக்குடுவை செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் மனைவியின் திருமேனியும் செதுக்கப்பட்டுள்ளது. இதன் வலது கையில் மலர்ச்செண்டு, இடது கையில் மதுக்குடுவையை உயர்த்தி பிடித்து, ஆடை ஆபரணங்களுடன் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.
சதிக்கல் 3
இதில் வீரனின் கைகளில் வாளை உயர்த்தியபடியும், மனைவி மலர்ச்செண்டை உயர்த்தியபடியும் இருவரின் இடது கைகள் தொடையில் இருக்கும்படி அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் முறையான ஆய்வை மேற்கொண்டால் திருமால் கிராமத்தின் தொன்மையான வரலாற்றையும், தமிழக மக்களின் தனித்துவமான வாழ்வியலையும் அறியலாம்.