சென்னை: திருநெல்வேலி அருகே பல்லை பிடுங்கி, குற்றவாளியை சித்தரவதை செய்த ஏஎஸ்பி பல்வீர்சிங்கை சஸ்பெண்ட் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், சிறிய குற்றங்களில் ஈடுபட்டு, போலீசில் சிக்கிய நபர்களை விசாரணையின் போது, குறடு கொண்டு பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங்கை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக சார்பில் சட்டசபைக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசியல் சார்பின்றி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.