பழவேற்காடு:சென்னை காவாங்கரை பகுதியைச் சேர்ந்த சங்கர், 61. இவர், திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி, கடந்த ஆண்டு, ஜூலையில் ஓய்வு பெற்றார்.
ஓய்வூதியம் தொடர்பான பணப்பலன்கள் பெறுவதற்காக, பழவேற்காடு மருத்துவமனை கணக்கு பிரிவிற்கு சென்றபோது, அங்குள்ள உதவியாளர்கள் லோகேஷ், 40, மற்றும் ரமேஷ், 43, ஆகியோர் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளனர்.
உடல்நலம் சரியில்லாத தன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பணம் வேண்டும் என, மருத்துவர் சங்கர் தெரிவித்தும், லோகேஷ், பணப்பலன்களை விடுவிக்க மறுத்து, அலைகழித்து உள்ளார்.
இது குறித்து, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம், சங்கள் புகார் அளித்தார். அதன்படி, நேற்று காஞ்சிபுரம் சரக டி.எஸ்.பி., கலைசெல்வம் தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் பழவேற்காடில் முகாமிட்டனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, நேற்று, மருத்துவர் சங்கர் கொடுத்த, ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை ரமேஷ் வாங்கினார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமேஷை பிடித்து விசாரித்தனர். லோகேஷிற்காக லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து, லோகேஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ரமேஷிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.