வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அரிய வகை நோய்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், ‛ அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரிய வகை நோய் என கடந்த 2021ம் ஆண்டில் மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு வரி விலக்கு பொருந்தும். 10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு, அரிய நோய்களுக்கான சிகிச்சை செலவு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஏற்படுகிறது. சிகிச்சை செலவை கருத்தில் கொண்டு, சுங்க வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகை மருந்துகள் தேவைப்படும் பயனாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, மத்திய சுகாதார ஆய்வாளர்களிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும் போது, இந்த முழுவரி விலக்கு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு, சில வரிகளை விதித்திருந்தது, தற்போது முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.