மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் வீட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தது. அதுவரை ஒரு போலீஸ்காரர் வீட்டில் வாடகைக்கு வசிக்க முன்பணம் கொடுத்தோம். அவர் வீட்டை ஒப்படைப்பதில் தாமதித்தார். பின் வீட்டை காலி செய்வதில் அவருக்கும், எங்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
அவர் திருவட்டாறு போலீசில் 2010 ல் புகார் செய்தார். என் மீது பொய்யாக விபசார வழக்கு பதிந்தனர். கைதாகி ஜாமினில் வந்தேன். என் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
பொய் வழக்கால் எனது எதிர்காலம் பாதித்தது. எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக உள்துறை செயலருக்குஉத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஆர்.விஜயகுமார்: மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தேவையெனில் அத்தொகையை தவறு செய்த போலீசாரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு உத்தரவிட்டார்.