வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எதிராக டில்லியில் ஆம்ஆத்மி கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் வெளிப்பாடாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி போஸ்டர்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் ‛மோடியை நீக்குங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்' என ஆம்ஆத்மி கட்சியினர் போஸ்டர் ஒட்டினர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட வழக்குகளை போட்ட போலீசார், 6 பேரை கைது செய்தனர். இதற்கு பதிலடியாக, ‛கெஜ்ரிவாலை நீக்குங்கள், டில்லியை காப்பாற்றுங்கள்' என்ற வாசகங்களுடன் பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டினர்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், ‛எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜனநாயகத்தில் ஒரு தலைவருக்கு ஆதரவாகவோ, அல்லது எதிராகவோ தங்களது பார்வைகளை வெளியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே, போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வேண்டாம்' என்றார்.
இந்த நிலையில், தற்போது டில்லியில் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றி ‛இந்திய பிரதமருக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டுமா?' என்ற கேள்வியுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.