வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்போதும் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும், அவர் எப்போதும் பொய் சொல்கிறார் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மோடி எனும் சமுதாயத்தை அவதூறாக பேசியதாக அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ., தான் காரணம் எனக்கூறி காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‛ராகுல் விவகாரத்தில் பா.ஜ.,வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ் இந்த விஷயத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: அமித்ஷாவை பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. உள்துறை அமைச்சர் எப்போதும் தவறாக வழிநடத்துகிறார். அவர் எப்போதும் பொய் சொல்கிறார். ராகுல் வழக்கில் மின்னல் வேகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாட்டில் எங்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என நினைக்கிறேன்: ராகுலுக்கு எதிராக எத்தகைய பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். எங்கள் சட்டக்குழு மூலமாக நாங்கள் அதை எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.