வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: ''எனக்கு ஆறு வயது இருக்கும் போது இரண்டு ஆண்கள் என்னை பாசமாக அழைத்து...,'' என தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை, கேரள மாநிலம் பத்தணந்திட்டை கலெக்டர் திவ்யா எஸ் அய்யர் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திவ்யா எஸ் அய்யரின் சொந்த ஊர் திருநெல்வேலி. திருவனந்தபுரத்தில் சப் கலெக்டராக இருந்த போது காங்., எம்.எல்.ஏ., சபரிமநாதனை காதலித்து திருமணம் செய்தார். தற்போது பத்தணந்திட்டை கலெக்டராக உள்ளார். கடந்த சீசனில் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த போது எந்த அசம்பாவிதமும் இல்லாமல் வெற்றிகரமாக சீசனை நிறைவு செய்தவர்.
பத்தணந்திட்டையில் பத்திரிகையாளர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்த பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
![]()
|
நான் ஒன்றாம் வகுப்பு படித்த போது இரண்டு ஆண்கள் என்னை பக்கத்தில் அழைத்து பாசம் காட்டினர். இவர்கள் என்னை ஏன் தொட வேண்டும், உண்மையிலேயே பாசத்துடன் இருக்கிறார்களா என என்னால் யூகிக்க முடியவில்லை. அவர்கள் என் ஆடையை அவிழ்க்க முயற்சித்த போதுதான் விபரீதத்தை புரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி ஓடினேன். என் தாய், தந்தையர் எனக்கு தந்த தைரியம்தான் அந்த பேராபத்தில் இருந்து என்னை காத்தது. அதன் பின்னர் கூட்டங்களுக்கு சென்றால் அந்த இரண்டு முகங்கள் இருக்கிறதா என்பதை தேடுவேன்.
குழந்தைகள் எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் அத்துமீறல்களை குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியரும் சொல்லித்தர வேண்டும். சிறு வயதிலேயே குட் டச், பேட் டச் பற்றி சொல்லித்தர வேண்டும். பட்டாம்பூச்சி போல பறந்து நடக்க வேண்டிய பருவத்தில் அவர்களை பேராபத்தில் சிக்காமல் பாதுகாக்க வேண்டியது இந்த சமூகத்தில் அனைவரது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.