ராமேஸ்வரம்-ராமேஸ்வரம் அருகே பாம்பனில் திடீரென கடல் உள் வாங்கியதால் நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.
பாம்பன் தென் பகுதியில் சின்னபாலம் மீனவர் கிராமத்தில் 200 மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் நேற்று திடீரென 200 மீ., கடல் உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் பாசிபடர்ந்த நிலப்பரப்பு தெரிந்தது. மேலும் கடல் சிப்பிகள், நண்டுகள் கடல் நீர் இன்றி தத்தளித்தன.
கடல் உள்வாங்கியதால் கடற்கரையில் நிறுத்தி இருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.
இதனால் நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர். நேற்று மதியம் 2:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் சின்ன பாலம் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.
கோடை காலமான மார்ச் முதல் மே வரை கடல்நீர் உள்வாங்குவதும், மதியத்திற்கு பின் கடல் நீர் மட்டம் உயர்வதும் இங்கு வழக்கம், என மீனவர்கள் தெரிவித்தனர்.