வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: 'அரசுப் பணியில் சேர்ந்து ஊதியம் பெற்று, கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டோருக்கு மீண்டும் வேலை தரப்படும்'' என, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது:
புதுச்சேரிக்கு நிர்வாக சீர்திருத்தம் முக்கியமான ஒன்று. நிர்வாக சீர்திருத்தத்தை கொண்டு வந்தால்தான் விரைவாக அரசின் எண்ணங்களை செயல் வடிவில் கொண்டு வரமுடியும். நிர்வாக சீர்திருத்தம் ஏன் தேவை என்பதை எம்.எல்.ஏ.,க்கள் எல்லோரும் சட்டசபையில் பேசியுள்ளனர்.

நிர்வாக சீர்திருத்தம்
சட்டசபையில் இம்முறை தலைமைச் செயலர், செயலர்கள் பற்றி அதிகளவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதை போக்கும் அளவில் சீர்திருத்தம் செய்யப்படும்.
நிறைய சிக்கல்கள் உண்டாக்கும் வகையில் எளிமையாக செய்ய முடியாத வகையில் பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை தீர்க்க நிர்வாக சீர்திருத்தத்தில் அரசு கவனம் செலுத்தும்.
புதிய சட்டசபைக்கு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் கட்டுவது என விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டிற்குள் புதிய சட்டசபை கட்ட முடிவு செய்து பூமி பூஜை போடப்படும்.
மீண்டும் வேலை
காலி பணியிடங்களை நிரப்புவதே அரசின் எண்ணம். 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருந்தன. துறை வாரியாக நிரப்பி வருகிறோம். விரைவில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
முன்பு பணியில் அமர்த்தப்பட்டு, அரசு சம்பளம் வாங்கி கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்தால் அல்லது நிறுத்தப்பட்டு இருந்தால், திரும்பவும் வேலை தரப்படும். ஆட்சி மாறலாம். பணி மாறாது.
குறிப்பாக, வேளாண் அறிவியல் நிலையத்தில் 156 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். இதேபோல் மதர்தெரசா கல்லுாரி, பொதுப்பணித் துறையில் சம்பளம் பெற்றிருந்து நீக்கப்பட்டிருந்தால் அவர்களும் பணியில் அமர்த்தப்படுவர்.
பொதுவாக பணியில் இருந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி தரப்படும். சட்டசபையில் பணிக்கு சேர்ந்தோர் தொடர்ச்சியாக பணிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புற மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். எனவே அதற்கான நடவடிக்கை எடுக்கிறோம். ஐந்து தொகுதிகள் உள்ளடங்கிய அரசு பொது மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறோம்.
துறை சார்ந்த அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்படும். எல்.டி.சி., - யூ.டி.சி., பணிக்கான தேர்வு ஏப்ரலில் நடத்தப்படும்.

அதிக நிதி பெறுவோம்
எம்.எல்.ஏ.,க்கள் அதிக நாட்கள் சட்டசபை நடத்த வேண்டும் என விரும்பினர். அதற்கு ஏற்ப அதிக நாட்கள் சட்டசபை நடத்தப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.,க்கள் மக்களின் குறைகளை தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், செயலர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் அனைத்தையும் செயல்படுத்த முடியும்.
மத்திய அரசு உதவியோடும் உறுதுணையோடும், அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுச்சேரியை முன்னேற்றுவோம்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர்.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.
கருணாநிதி, ஜெ.,வுக்கு
அரசு விழா எடுக்கப்படும்முதல்வர் ரங்கசாமி கூறும்போது, 'மறைந்த தலைவர்களுக்கும், நம் நாட்டுக்கு, மொழிக்கு, பாடுபட்டோருக்கும் அரசு விழா எடுக்க உள்ளோம். அதன்படி, மறைந்த பிரதமர் வாஜ்பாய், முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட செல்லான் நாயக்கர் ஆகியோருக்கு அரசு விழா எடுக்கப்படும்.சிலை வைப்பது தொடர்பாக சிக்கல்கள் உள்ள தலைவர்களின் பெயர்களை பள்ளிக்கு சூட்டுதல் உள்பட பல்வேறு நிலைகளில் தலைவர்களுக்கு பெருமை சேர்க்கப்படும்' என்றார்.