காங்கேயம்: வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமானது.
வெள்ளகோவிலைச் சேர்ந்த சரவணன்,47, சாமிநாதன்,50, ஆகியோர்களுக்கு, வெள்ளகோவில் செங்காளிபாளையம் ரோடு பகுதியில் வேல்ஸ் ஸ்பின்னர்ஸ் என்னும் நூல் மில், (கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிப்பு) கடந்த ஆறு வருடங்களாக வைத்து நடத்தி வருகிறார். இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பகல் 11:30 மணி அளவில் மில்லில் திடீரென கரும்புகை வெளியேறியது. அங்குள்ள ஒரு பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பிடித்து எரிந்தது.
தகவலந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட குழுவின் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ அதிகமாக பரவியதை அடுத்து காங்கேயம் தீயணைப்பு நிலைய வாகனமும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பினும் நூல், இயந்திரம், கட்டடம் என ரூ.10 லட்சம் அளவிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.