சைவ குரவர்கள் பாடல் பெற்ற தலமாகவும், ஆழ்வார் அங்குள்ள நிலாத்திங்கள் துண்டப்பெருமாளை மங்களாசாசனம் செய்த தலமாக ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ குரவர்கள் நால்வராலும் தேவாரப்பாடல் பாடப் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் குறித்து பாடப் பெற்றுள்ளது.
கோவில் மூலவரை தரிசனம் முடிந்து சுற்றி வரும் போது திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டப்பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.
இத்தல விநாயகர் 'விகடசக்ரவிநாயகர்' என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டது.
கோவில் தல வரலாறு
கைலாயத்தில் சிவன் தியானத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது.
தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபடு விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.
இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர, தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள்.
அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார்.
அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு 'தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.
சுந்தரரருக்கு அருள்
பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார்.
திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால், அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும், சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார்.
எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிருத்வி தலம்
பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மண் - நிலம் தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப் பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.
சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திரு முடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.
ஒற்றை மாமரம்
ஏகாம்பரநாதர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இவற்றை சிவனது 'திருமணகோலம்' என்கிறார்கள்.
அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். ஏக+ஆமரம்= ஏகாம்பரம், ஒரே மாமரம் என்று பெயர். இதை வேத மாமரம் என்றும் அழைக்கின்றனர்.
மிகவும் புனிதமான இம்மரம்,நான்கு வேதங்களையும் நான்கு கிளைகளாகக் கொண்ட தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
பல்வேறு மகத்துவமும், சிறப்பும் நிறைந்த இம்மரம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வாட ஆரம்பித்து, முழுதும் பட்டுபோகும் தருவாயில் இருந்தது. 2004ல் வேளாண்துறை உற்பத்தி ஆணையராக இருந்த அரசு கூடுதல் தலைமைச் செயலர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலர் முனைவர் ரா.கண்ணன் அறிவுரைப்படி, இம்மரத்தினுடைய திசுக்களை வைத்து, மரபணு தாவர முறையில் புதிய கன்றுகளை உருவாக்கி கோவில் நந்தவனத்தில் நடப்பட்டது. தற்போது அந்த மாமரம் நன்கு வளர்ந்து தலவிருட்சமாக காட்சியளிக்கிறது.
நேர்த்திக்கடன்
சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிேஷக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோவிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு.
தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு, ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால், நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
பிரார்த்தனை: இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால், இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.