உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
எம்.நடராஜன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தெருக்களின், கடைகளில் உள்ள பெயர் பலகைகள்ஆங்கிலத்தில் இருப்பதாகவும், ஒரு மாத காலக்கெடுவுக்குள் அவை அனைத்தையும், தாய் மொழியாம் தமிழ் மொழியில் மாற்றி எழுதாவிட்டால், தானே தார் வாயிலாக, அந்த ஆங்கில பெயர்களில் உள்ள, 'போர்டு'களை அழிக்கப் போவதாக அறைகூவியிருக்கிறார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.
சுவாமி விவேகானந்தரின் குருவான, ராமகிருஷ்ண பரமஹம்சரை அனைவருக்கும் தெரியும். ஒரு முறை, ஒரு மூதாட்டி தன் பேரனை அழைத்துக் கொண்டு, ராமகிருஷ்ணரிடம் சென்று, 'ஐயா! இவன் என் பேரன். தினமும் நிறைய இனிப்பு பண்டங்களை சாப்பிடுகிறான். அதிகம் திங்காதே என்றால், பொருட்படுத்த மாட்டேன் என்கிறான். இவனுக்கு, தாங்கள் கொஞ்சம்புத்திமதி சொல்லி திருத்துங்கய்யா...' என்று வேண்டினார்.
பாட்டியையும், பேரனையும் உற்றுப் பார்த்த பரமஹம்சர், அவர்களிடம், 15 நாட்களுக்கு பிறகு வந்து பார்க்கும்படி கூறினார். இருவரும், 15 நாட்களுக்குப் பின், மீண்டும் பரமஹம்சரை சந்தித்தனர்.
![]()
|
அப்போது, அந்த சிறுவனிடம், 'தம்பி இனிப்பு அதிகம் உண்ணாதே. அது, உன் உடல் நலத்தை பாதிக்கும்' என்று புத்திமதி கூறினார் பரமஹம்சர்.
பாட்டிக்கு ஆவேசம் வந்தது... 'ஏனய்யா இதை சொல்றதுக்கா எங்களை, ௧௫ நாட்கள் பொறுத்து வரச் சொன்னீங்க... இதை, அப்பவே சொல்லியிருக்கலாமே?' என்று, கோபத்தோடு கேட்டார்.
அதற்கு பரமஹம்சர், 'தாயே கோவிச்சுக்காதே... உன் பேரனுக்கு புத்திமதி சொல்லும் அளவுக்கு, என் தகுதியை உயர்த்திக் கொள்ளவே, 15 நாட்கள் அவகாசம் கேட்டேன். ஏனெனில், 15 நாட்களுக்கு முன் வரை, நானும் தினமும் நிறைய இனிப்பை உண்டு வந்தேன். அப்போது, உன் பேரனுக்கு புத்திமதி சொல்லும் அருகதை எனக்கு இருக்கவில்லை; அதனால் தான் அவகாசம் கேட்டேன். இப்போது இனிப்பு சாப்பிடுவதை அறவே நிறுத்தி விட்டேன். புத்திமதி சொல்லும் அருகதை வந்து விட்டது; அதனால், புத்திமதி சொன்னேன்' என்றாராம்.
இப்போது அண்ணன் ராமதாசிடம் செல்வோமா...
அண்ணன், 'ராமதாஸ்' பெயரிலும், அவரது மனைவி, 'சரஸ்வதி' பெயரிலும் உள்ள, 'ஸ்' என்ற எழுத்து வடமொழி எழுத்து. மருமகள் பெயர் சவுமியா; இது, தமிழ் பெயரே அல்ல.
அவரது மூன்று பேத்திகளின் பெயர்கள் முறையே சம்யுக்தா, சங்கமித்ரா மற்றும் சஞ்சுத்ரா. இந்த மூன்றில் எதுவுமே தமிழ்ப் பெயர்கள் கிடையாது.
வியாபார நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு விதித்த ஒரு மாதக் கெடு முடிந்து, அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஆங்கில மொழி எழுத்துகளை அழிக்க, தார் சட்டி மற்றும் துாரிகையுடன் புறப்படும் முன், ராமதாஸ் தன் பெயரையும், தன் வீட்டில் உள்ளவர்களின் பெயரையும் மாற்றுவாரா... ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், அதற்கு முன் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.